Freitag, 28. März 2014

திருத்தமிழ்: ஆங்கில எழுத்துருவில் தமிழ்? எதிர்வினை #1

திருத்தமிழ்: ஆங்கில எழுத்துருவில் தமிழ்? எதிர்வினை #1                                                                      இந்துவத்துவா மனம் இந்த மலையாளத்தை தாய்மொழியாக கொண்ட  இவர் இதே கருத்தை மலையாளத்தவர்களுக்கு முன்மொழியலாமே.தமிழிலல் ஏதோ எழுதி காசு பார்க்கும் இவர் அத்தோடு நிற்கட்டும்.இவரை சிங்ப்பூர் அல்லது வேறு நாட்டிற்கு அழைத்து வந்து இவரின்  அறிவுரையால்தான் தமிழர்கள் விழிப்படையும் நிலைப்பாட்டில் இல்லை.வீணாக தமிழுக்கு எதிர்வினையில் ஈடுபடுபடுவோர்க்கு ஆதரவு தருவதை நிறுத்திக்கொள்வது தமிழர்க்கு நல்லது.


Mittwoch, 27. Oktober 2010

தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளுக்குச் சில கேள்விகள்

தமிழர்களின் தலைமையிலான தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளுக்குச் சில கேள்விகள்......
தமிழர்களாகிய எங்களின் வாக்குகள் அடுத்து வரும் தேர்தல்களில் உங்களுக்கு வேண்டுமா?
ஆட்சிக்கு வந்தால் இவற்றையெல்லாம் செய்து முடிப்பதாக உறுதியளித்தால்தான் எங்களின் வாக்குகள் உங்களுக்கு!

1. தமிழர் இழந்த ஆற்றுநீர் உரிமைகளை மீட்க உருப்படியான உங்களின் திட்டம் என்ன என்பதைத் திட்டவட்டமாக முன்கூட்டியே அறிவிக்க வேண்டும். காவிரி, பாலாறு, தென்பெண்ணை, முல்லைப்பெரியாறு அணை ஆகியவற்றின் மீதான வழிவழி வந்த உரிமையை அண்டை மாநிலத் 'திராவிடர்கள்' அடாவடித்தனமாகப் பறிப்பதையும், கைச்சாத்திட்ட ஒப்பந்தங்களையும் ஆணையங்களின் இடைக்காலத் தீர்ப்புகளையும் உச்சநீதிமன்றத் தீர்ப்புகளையும் மதிக்காததையும் கண்டும் காணாமல் தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய ஆற்றுநீர்ப் பங்கீடுகளை வாங்கித் தராமல், தமிழகத்தையும் தமிழர்களையும் வஞ்சித்துக் கொண்டிருக்கும் தில்லி வல்லரசை எதிர்த்து உருப்படியாகப் போராடுவீர்களா?

2. தமிழர்களிடமிருந்து பறித்து மலையாளிகளுக்குத் தாரைவார்க்கப்பட்ட இடுக்கி மாவட்டத்தை மீண்டும் தமிழகத்தோடு சேர்க்கும்படி போராடாமல் முல்லைப்பெரியாற்று அணையின் மீதான உரிமைக்காகக் குரலெழுப்புவது, தும்பை விட்டு வாலைப் பிடிக்கும் கதைதானே? அதனால், தமிழர்கள் பெரும்பான்மையராக வாழும் இடுக்கி மாவட்டத்தைத் தமிழகத்தோடு சேர்க்குமாறு போராடத் துணிவீர்களா?

3.தமிழர்கள் பெரும்பாலோராகவுள்ள சித்தூர் மாவட்டம் முன்னாள் குடியரசுத்தலைவர் சர்வபள்ளி இராதாகிருட்டினனின் அடாவடித்தனத்தால் ஆந்திரத்துடன் சேர்க்கப்பட்டது. சித்தூர் மாவட்டத்துக் குப்பத்தில் அணை கட்டித் தமிழ் நாட்டுக்குப் பாலாற்று நீர் வராமல் தடுக்கத் தெலுங்கன் முயல்கின்றான். இந் நிலையில், சித்தூர் மாவட்டத்தைத் தமிழகத்தோடு மீண்டும் சேர்க்கச் சொல்லிக் கேட்காமல், பாலாற்றின்மீது தமிழருக்குள்ள உரிமையை நிலைநாட்டுவோம் என்பது வெற்றுப் பம்மாத்துத்தானே? ஆகவே, சித்தூர் மாவட்டத்தை மீட்கப் போராடத் துணிவீர்களா?

4. மேற்குமலையில் தோன்றி நெல்லை மாவட்டத்தில் ஓடிய கருப்பானாறு முதலில் கிழக்குநோக்கி ஓடிக்கொண்டிருந்தது. ஓரிரு மலைப்பாறைகளை வெடிவைத்துத் தகர்த்த மலையாளிகள், அந்த ஆற்றை மேற்குநோக்கி ஓடுகின்ற ஆறாகச் செய்துவிட்டனர். தமிழகத்தை ஆண்ட/ஆளும் கழக ஆட்சிகள் எதுவும் இந்த அட்டூழியத்தை ஏனென்று தட்டிக் கேட்டதில்லை. கருப்பானாற்றின்மீது அவை உரிமை பாராட்டியதும் கிடையாது. நீங்கள் ஆட்சிக்கு வந்தால், மலையாளிகள் தான்தோன்றித்தனமாகவும் அடாவடியாகவும் மேற்குநோக்கி வலிந்து திருப்பிக்கொண்ட கருப்பானாற்றை மீண்டும் கிழக்குநோக்கித் திருப்பிவிடுவீர்களா?

5. கருநாடக, கேரள, ஆந்திர எல்லைப்புறங்களில் வாழும் தமிழர்கள் சொல்ல முடியாத துன்பங்களுக்கு ஆளாகி வருகின்றனர். 1956 மொழிவழி மாநில உருவாக்கங்களின்போது தமிழ்நாட்டுக் கன்னடரும் தெலுங்கரும் வடவரும் தலைமையேற்றிருந்த திராவிட இயக்கமும் பேராயக் கட்சியுமே அதற்குக் காரணமாகும். இதனால், தமிழர் வாழும் கொள்ளேகாளம், பெங்களூர், கோலார்த் தங்கவயல், சித்தூர், இடுக்கி, தேவிகுளம், பீர்மேடு, கன்னியாகுமரியின் சில பகுதிகள் முதலான வளம் மிக்கப் பகுதிகளை இழந்தோம். அவற்றையெல்லாம் மீண்டும் தமிழகத்தோடு இணைப்பதற்கான உருப்படியான போராட்டங்களையும் உத்திகளையும் முன்னெடுப்பீர்களா?

6. 1956ஆம் ஆண்டில் 'தனிக்' கேரளம் அமைக்கப்பட்டது. பின்னர்ப் பழைய கன்னியாகுமரியின் ஒரு பகுதி மட்டும் தமிழகத்தோடு இணைக்கப்பட்டது. ஆயினும், கேரளத்திற்கும் தமிழகத்திற்கும் இடையிலான 837 கட்டை (கிலோமீட்டர்) எல்லை இந்நாள் வரையில் வரையறுக்கப்படவில்லை. இதனால், மலையாளிகள் தமிழகத்திற்குள் ஊடுருவி, கண்ணகி கோயில் உள்ளிட்ட தமிழர்பகுதிகளையெல்லாம் மெல்ல விழுங்கி வருகின்றனர். எல்லையை வரையறுப்பதற்காகக் கூட்டப்பட்ட கூட்டங்களில் தமிழக அரசின் சார்பாக அனுப்பப்பட்ட தமிழகப் பொதுப்பணித் துறை அதிகாரிகளெல்லாம் பெரும்பாலும் மலையாளிகளாகவே இருந்தனர். இதனால், கேரளத்துடனான தமிழகத்தின் எல்லைகள் வரையறுக்கப்படாமலேயே அரை நூற்றாண்டுக் காலம் ஓடிவிட்டது! தனித்தோ கூட்டணியாகவோ நீங்கள் ஆட்சிக்கு வந்தால், கேரளத்துடனான தமிழகத்தின் எல்லையை விரைந்து வரையறுப்பீர்களா? கேரளத்துடனான எல்லை வரையறுப்புப் பேச்சுகளுக்குத் தமிழக அரசின் சார்பாக மலையாள அதிகாரிகளை அனுப்பாமல் இருப்பீர்களா?

7. தமிழகம் வாசலில்லா வீடு! தமிழரின் எல்லைகளில் அயலாரின் ஊடுருவல் ஓயாது நடந்து வருவதால், தமிழகத்தின் எல்லைப்புறங்கள் உள்ளுக்குத் தள்ளிப் போய்க்கொண்டே இருக்கின்றன. நீங்கள் ஆட்சிக்கு வந்தால், தமிழகத்தின் எல்லைகளைப் பாதுகாப்பதற்கென்றே எல்லைக்காப்புப் படை ஒன்றைக் கட்டியெழுப்புவீர்களா?

8. பிற மாநிலங்களில் அந்தந்த மாநிலத்தவரே அம் மாநிலங்களின் முதலமைச்சராகவும் அமைச்சர்களாகவும் இருப்பதைப்போல், தமிழின உணர்வு கொண்ட தமிழர்கள் மட்டுமே தமிழகத்தின் முதலமைச்சர்களாகவும் அமைச்சர்களாகவும் வர வேண்டும் என்னும் மரபைத் தோற்றுவிப்பீர்களா? அம் மரபைக் கண்ணெனக் காப்பீர்களா?

9. தமிழுக்குச் செம்மொழித் தகுதியை வழங்கிய தில்லி அரசு, அச் செம்மொழித் தகுதியைப் பெற வேண்டின், ஒரு மொழி 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக இருந்தால் போதும் என்று வேண்டுமென்றே ஒரு சூழ்ச்சிப்பொறியை இட்டுள்ளது. ஆயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்குமுன் கன்னடமும் தெலுங்கும் தமிழின் வட்டார வழக்குகளாயிருந்தன. அவற்றைக் கொடுந்தமிழ் என்கிற வடுகு மொழிகள் என்றனர். அண்மையில், நாகை மாவட்டத்துச் செம்பியன் கண்டியூரில் கண்டெடுக்கப்பட்ட புதிய கற்காலத்துக் கற்கோடரியின்மீது தமிழ் எழுத்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. புதிய கற்காலத்திலேயே தமிழுக்கு எழுத்து இருந்தது என்னும் உண்மை இதனால் தெரிய வந்தது., தமிழகத்தின் புதிய கற்காலம் 45,000 ஆண்டுகளுக்கு முந்தையது. ஆயினும், செம்பியன் கண்டியூரில் கிடைத்த தமிழ் எழுத்துகளைக் கொண்ட கற்கோடரியின் காலம் வெறும் கி. மு. 1000 ஆண்டளவிலானதுதான் என்று வாய் கூசாமல் குறைத்து மதிப்பிடுவது ஒரு புறம் கிடக்கட்டும். புதிய கற்காலத்திலேயே தமிழுக்கு எழுத்து இருந்தது என்ற உண்மையைத்தான் இங்குக் கோடிட்டுக் காட்டுகின்றோம். குறைந்தது இருபதாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே எழுத்தும் இலக்கியமும் வரலாறும் கொண்டிருந்த தமிழ் மட்டுமே செம்மொழி எனப்படும் தகுதிக்கு உரியது என்று இந்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று ஆட்சிக்கு வந்தபின் தமிழகச் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றுவீர்களா?

10. பிற மாநிலங்கள் எல்லாவற்றிலும் அந்தந்த மாநில மொழிகளைப் பிற மொழியினரும்கூடக் கட்டாயமாகப் படிக்க வேண்டும். தமிழகத்தில் மட்டும் தமிழருக்கும்கூடத் தமிழ் கட்டாய மொழியாக இல்லாத அவலநிலை உள்ளது. இந்த இழிவைப் போக்க, உங்கள் கூட்டணி ஆட்சி வந்தால் தமிழகத்திலுள்ள எல்லாரும் தமிழைக் கற்க வேண்டும் என்னும் சட்டத்தை இயற்றுவீர்களா?

11. தமிழகத்தில் தமிழை ஆட்சிமொழியாகவும் அலுவலக மொழியாகவும் பாடமொழியாகவும் வழக்குமன்ற மொழியாகவும் வழிபாட்டு மொழியாகவும் ஆக்குகின்ற சட்டத்தை இயற்றுவீர்களா?

12. 'தமிழே முதன்மொழி' என்ற பாவாணரின் மொழிக்கோட்பாடே தமிழக அரசின் மொழிக்கொள்கை என்று ஏற்றுக்கொண்டு, தமிழின் தாய்நிலையை மறுக்கும் 'மூலத்திராவிடம்' என்னும் பொய்க்கோட்பாட்டுக்குக் கடைவிரிக்கும் தமிழ் எதிர்ப்பாளர்களின் சூழ்ச்சியைக் கண்டித்துச் சட்டப்பேரவையில் தீர்மானம் இயற்றுவீர்களா?

13. தமிழர்களைத் 'திராவிடர்கள்' என்று அடையாளப்படுத்தவே கூடாது; தமிழர்களைத் 'தமிழர்கள்' என்று மட்டுமே எல்லா அரசு ஆவணங்களிலும் மடல்தொடர்புகளிலும் பாடநூல்களிலும் பிறவற்றிலும் குறிப்பிட வேண்டும் என்று சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றுவீர்களா?

14. தமிழைத் 'திராவிடமொழி' என்று இனிமேல் குறிப்பிடவே கூடாது என்றும், தமிழிலிருந்து கிளைத்த மொழிகளை இதற்குமேல் தமிழிய மொழிகள் என்றே குறிப்பிட வேண்டும் என்றும் சட்டப்பேரவையில் தீர்மானம் இயற்றுவீர்களா? பழந்தமிழ் எழுத்துகளைப் 'பிரமி' எழுத்துகள் என்று குறிப்பிடக்கூடாது என்று சட்டப்பேரவையில் தீர்மானம் இயற்றுவீர்களா?

15. தமிழில் வேண்டுமென்றே பிறமொழிக் கலப்புடன் எழுதுவதைப் பிரான்சு முதலான நாடுகளில் உள்ளதைப்போல் தண்டனைக்குரிய குற்றம் என்று சட்டம் இயற்றுவீர்களா?

16. இனி வரும் தேர்தல்களில் அமைக்கப்படும் கூட்டணிகள் தமிழரால் மட்டுமே தலைமை தாங்கப்பட வேண்டும் என்ற உறுதியான நிலைப்பாட்டை எடுப்பீர்களா? அந்தக் கூட்டணிகள், தமிழர்களின் கூட்டணிகளாக மட்டுமே இருக்குமாறு கண்ணுங்கருத்துமாகப் பார்த்துக்கொள்வீர்களா?

17. தமிழ்நாட்டில் பணிபுரியும் இந்திய ஆட்சித்துறை அதிகாரிகளும், இந்தியக் காவல்துறை அதிகாரிகளும், மாவட்ட ஆட்சியர்களும், நடுவணரசு மாநில அரசு அதிகாரிகளும் தமிழர்களாகவே இருக்க வேண்டும் என்று சட்டப்பேரவையில் தீர்மானம் இயற்றி அதைச் செயல்படுத்துவீர்களா?

18. பிற மாநிலங்களிலும் பிற நாடுகளிலும் தமிழர்கள் இன்னலுக்கு ஆளாகும் போதெல்லாம் அவர்களுக்குத் தோள்கொடுப்பது தாய்த்தமிழகத்தின் கடமை என்று சட்டப்பேரவையில் தீர்மானம் இயற்றுவீர்களா? அங்கெல்லாம் உள்ள தமிழர்கள் தமிழைக் கற்பதற்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்வீர்களா? புலம்பெயர்ந்த தமிழர்களுக்குத் தமிழகத்துக் கல்வியகங்களில் தனி இடம் ஒதுக்குவீர்களா? "எங்குப் பிறப்பினும் தமிழன் தமிழனே, இங்குப் பிறப்பினும் அயலான் அயலானே!" என்னும் பாவேந்தரின் கொள்கையை நடைமுறைப்படுத்துவீர்களா?

19. தமிழ்நாட்டில் தொழில் தொடங்கத் தமிழர்களுக்கே முன்னுரிமை என்ற சட்டத்தை இயற்றுவீர்களா?

20. சாதி இடஒதுக்கீட்டையும் சலுகையையும் பற்றிய சட்டநாதன் குழுவின் அறிக்கையை நடைமுறைப்படுத்து வீர்களா?

21. மேல்சாதி கீழ்ச்சாதி என்று பாராமல் தமிழர்கள் எல்லாருக்கும் இடஒதுக்கீடும், தொடக்கக்கல்வி முதல் உயர்கல்வி வரையில் இலவயக் கல்வியும் உண்டு என்று சட்டம் இயற்றுவீர்களா?

22. கன்னடருக்கு உள்ளதைப்போல் தமிழகத்திற்கென ஒரு தனிக்கொடியை உருவாக்குவீர்களா?

23. கருநாடகத்தில் பொதுத்துறையிலும் தனியார்த்துறையிலும் 80% வேலைகள் கன்னடருக்கே ஒதுக்கப்படுகின்றன. அதேபோல், தமிழ்நாட்டிலும்கூட எல்லாத் துறைகளிலும் 80% வேலைவாய்ப்புகள் தமிழர்களுக்கு என்று ஒதுக்கப்பட வேண்டும் என்று சட்டப்பேரவையில் தீர்மானம் இயற்றுவார்களா?
தமிழகத்திலுள்ள உந்துவண்டித் தொழிற்சாலைகளில் ஓர் உந்துவை உருவாக்க 40,000 குடுமை (கேலன்) தண்ணீர் வேண்டுமாம். சென்னையைச் சுற்றியுள்ள உந்துவண்டித் தொழிற்சாலைகளில் பணிபுரிவோரில் 60% தெலுங்கர்களாகவும் 20% மலையாளிகளாகவும் இருக்கின்றனர். இவ்வாறு தமிழ்நாட்டில் தமிழர்கள் சிறுபான்மையராயுள்ள பெரிய, சிறிய தொழிற்சாலைகளுக்கு இலவயமாகவோ சலுகை அடிப்படையிலோ தண்ணீர், மின்சாரம் முதலியவற்றை வழங்குவதை உடனே நிறுத்துவீர்களா?

24. தமிழக மீனவர்கள் கடல்மேல் கொண்டிருந்த உரிமையைப் பறித்துக்கொண்ட இந்தியப் பேரரசு, அந்த உரிமையை இப்போது சிங்களவனுக்குக் குத்தகை விட்டுள்ளது. இதனால், தமிழக மீனவரின் வாழ்வுரிமை பறிபோயுள்ளது. தூத்துக்குடி அனல்மின் நிலையம், கல்பாக்கம் அணுவுலை, கூடங்குளம் அணுவுலை, இறால் பண்ணைகள், கரையோரப் பவழக்கொடிகளின் அழிப்பு, அலைவாய்க்காடுகளின் அழிப்பு முதலானவற்றால் தமிழகக் கரையோரத்தில் மீன்வளம் ஒழிந்து அது ஆழ்கடலுக்குத் தள்ளிப்போய்விட்ட நிலையில், தமிழக மீனவர்கள் இந்திய எல்லைக்குள்தான் மீன்பிடிக்க வேண்டும் என்று வற்புறுத்துவது பெரிய அட்டூழியமாகும். தமிழகத்தின் கடல் எல்லைகளைக் கடந்து ஆழ்கடலுக்குப் போய் மீன்பிடிக்கத் தமிழக மீனவர்களுக்கு உரிமை உண்டு என்று ஆட்சிக்கு வந்தால் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றுவீர்களா?
சிங்களவன் நூற்றுக்கணக்கான தமிழக மீனவர்களைச் சுட்டுக் கொன்றும் காயப்படுத்தியும் தளைப்படுத்தியும் அட்டூழியம் செய்யும் போதெல்லாம், தில்லி ஆண்டைகள் ஒரு முறைகூட வாய் திறந்து சிங்களவனைக் கண்டித்ததில்லை. இறந்த மீனவருக்கும் காயமுற்றவர்களுக்கும் உடைமைகளைப் பறிகொடுத்தவர்களுக்கும் சிங்களனிடமிருந்து இழப்பீடு கேட்டதும் இல்லை; வாங்கித் தந்ததும் இல்லை. இதனால், சிங்களன் சுட்டு இதுவரை செத்தவர்களுக்கும் காயமுற்றவர்களுக்கும் துன்புறுத்தப்பட்டவர்களுக்கும் தில்லி அரசு சிங்களனிடமிருந்து இழப்பீடு வாங்கித் தர வேண்டும் என்றும் சட்டப்பேரவையில் தீர்மானம் இயற்றுவீர்களா? தமிழக மீனவர்களின் தற்காப்புக்காக அவர்களுக்குத் துப்பாக்கிகளை வழங்குவீர்களா?

25. ஈழத் தமிழினத்தையே இல்லாது அழித்தொழிப்பதற்காகவும் அடிமைப்படுத்துவதற்காகவும் சிங்களன் தொடுத்துள்ள இனஒழிப்புப் போரானது 'இந்தி'யன் தமிழினத்தின்மீது நடத்துகின்ற ஒரு மறைமுகப் போரே என்பது உறுதி. இதனால், ஈழத்தமிழினம் எங்களின் சொந்த இனம் என்றும், அவர்களின் விடுதலைப் போருக்குத் துணைநிற்கத் தமிழகத் தமிழர்களுக்கும் உலகெலாமுள்ள தமிழர்களுக்கும் உரிமை உண்டு என்று சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வருவீர்களா?

26. தமிழீழ விடுதலைப்புலிகளின்மீது இந்தியா விதித்துள்ள தடையை உடனே நீக்க வேண்டுமெனச் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றுவீர்களா?

27. சிறப்புப் பொருளியல் மண்டிலங்கள் என்னும் பெயரில் வடநாட்டுப் பெருமுதலாளிகளுக்கும் பன்னாட்டினப் பெருமுதலைகளுக்கும் ஆயிரமாயிரம் குறுக்கங்கள் என்று தமிழகத்தின் மண்ணைத் தாரை வார்ப்பதைத் தடுத்து நிறுத்தித் தமிழரின் மண்ணும் நீரும் தமிழருக்கு மட்டுமே சொந்தம் என்றும், அதை விற்கவோ வாங்கவோ பறிக்கவோ அயலார் யாருக்கும் உரிமை இல்லை என்றும் சட்டப்பேரவையில் தீர்மானம் இயற்றுவீர்களா?
இந்திய அரசுச்சட்டத்தின் 370ஆம் பிரிவின்படி காசுமீரத்தில் உள்ளதைப்போல் தமிழரல்லாதார் யாரும் தமிழகத்து நிலத்தை வாங்கவோ விற்கவோ ஒற்றி வைக்கவோ முடியாது என்னும் சட்டத்தைத் தமிழகச் சட்டப்பேரவையில் இயற்றுவீர்களா?

28. ஆற்றுமணலை வரைமுறை இன்றிக் கொள்ளையடித்துச் சுற்றுசூழலுக்கும் அடிநீர் வளத்துக்கும் மிகப் பெரிய தீங்கைச் செய்துவரும் பெரும்புள்ளிகளுக்கும் அவர்களுக்குத் துணைபோகும் அதிகாரிகளுக்கும் வாழ்நாள் தண்டனை வழங்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டுவந்து அச் சட்டத்தை உறுதியாக நடைமுறைப்படுத்துவீர்களா? அவர்களின் சொத்துகளைப் பறிமுதல் செய்வீர்களா?

29. ஆலைக்கழிவுகளை ஆறுகளில் விட்டு ஆற்றுநீரை மாசுப்படுத்தும் தொழிற்சாலைகளை உடனே மூடுவீர்களா? இயற்கையை மாசுப்படுத்துவது தண்டனைக்குரிய குற்றம் என்றும் சட்டம் இயற்றுவீர்களா?

30. பட்டித்தொட்டியெலாம் என்றும் தெருத்தெருவாக என்றும் தமிழக அரசே சாராயக்கடைகளைத் திறந்து வைத்துத் தமிழகத்தையே குடிகார நாடாகக் கெட்டழித்துக் கொண்டிருக்கும் கொடுமையை ஒழித்துத் தமிழரின் ஒட்டுமொத்த இனச்சீரழிப்பைத் தடுத்து நிறுத்துவீர்களா?

31. திரைப்பட மாயை, பிறவகைப் போதைப்பொருள்கள், மேலைப்பண்பாட்டை வரைமுறையின்றித் தழுவுதல் என்பவற்றால் நேர்ந்து வரும் பண்பாட்டுச் சீரழிவைத் தடுக்க உரிய நடவடிக்கைகளை எடுப்பீர்களா?

பெங்களூர் குணா -

Samstag, 22. Mai 2010

நினைவு நாள்


பண்டிதர் க.அயோத்திதாசர் , இரட்டைமலை சீனிவாசன் , அண்ணல் அம்பேட்கர் வழி நின்று 50 ஆண்டுகளுக்கும் மேலாக நம் சமுதாயம் சீர்பெற பாடற்றிய என்னருமை

தந்தை திருமிகு கு.பெருமாள் அவர்களின் 27ஆம் ஆண்டு நிறைவு நினைவு நாள் இன்று.

Donnerstag, 29. April 2010

120 ஆம் பாவேந்தரின் பிறந்த நாளில் நாம் நினைவுக்கொள்ளவேண்டியது.

'' சித்திரச்சோலைகளே ! உமை நன்கு
திருத்த இப்பாரினிலே ! -முன்னர்
எத்தனை தோழர்கள் இரத்தம் சாரிந்தன
ரோ ? உங்கள் வேரினிலே !

..................................................
ஆர்த்திடம் எந்திரக் கூட்டங்களே ! உவ்கள்
ஆதி அந்தம் சொல்லவோ ! நீங்கள்
ஊர் த்தொழிலாளர் உழைத்த உழைப்பில்
உதித்த்து மெய் அல்லவோ !

- எனப் பாவேந்தர் தொடுக்கும் வினாக்களில்
எத்தனைக் கடுமையான உழைப்பை நல்கியும்
எத்தனை உயிர்களைக்கொடுத்தும் கோலார்
தங்கவயலைக் கட்டி எழுப்பி ,கட்டித் தங்கம்
வெட்டு எடுத்து, நாட்டின் பொருளியலை
சமன்மைப் படுத்தியுமுள்ளது. உலகத்தின்
இரண்டாம் பெரிய ,ஆழமான தங்கச்சுரங்கம் என்ற
பெருமைதனைப் பெற்றது.ஆசியாவிலேயேமுதன்முதல்
மின் இணைப்பும், பெரியச் சிறந்த மருத்துமனையும்
பண்டிதர் க.அயோத்திதாசர் ,இரட்டைமலை சீனிவாசன்
வழியை பின்பற்றி பகுத்தறி சிந்நன்னையுடன்
-சீரும் சிறப்பமுடன் கட்டுக்கோப்புடன் வாழ்ந்த
தங்கவயல் தமிழர்களை பார்த்து பாவேந்தர்கேட்பதுபோல்
பாவேந்தரின் பாடல் அமைந்துள்ளதைப் பார் தமிழா?.

Mittwoch, 14. April 2010

அண்ணல் அம்பேட்கரின் 119 -ம்,பிறந்த நாள்


நாகரீகமற்ற மக்களை நாகரீகமுள்ளவர்களாக ஆக்குவதற்கு
இந்துக்கள் மனிதநேய அடிப்படையில் எவ்வித முயற்சியும் மேற்கொள்ளவில்லை என்பது மட்டுமல்ல , இந்து மதத்தின்
பிடியிலுள்ள கீழ்ச் சாதியினர் மேல் சாதியினரின் பண்பாட்டு
நிலைக்கு உயர்வடைவதையும் அவரகள் திட்டமிட்டுத் தடுத்துள்ளனர்.
- அண்ணல் அம்பேட்கர்

Freitag, 27. November 2009

மாவீரர் நாள்



இன்று எம்மினம் தன்மானத்துடன் வாழ

தந்நில மீட்புக்காகப் போராடி வீரச்சாவினைத்

தழுவி, எம் கடமைதனை உண்ரத்த ஊக்கியாக

விளங்கிடும் மாவீரர் நாள்.தொலைநோக்குடன்

பகுத்தறிவுடன் இல்க்கினை எய்திட நமக்கு

விதையாகிப் போனவர் துளிர்விட்டு,இனியும்

யாம் ஏமாறாது இருக்க ஊக்கமளித்திடும் நாள்.

எம்மின் இலக்காகிய தனித்தமிழ் ஈழ வேட்கை

தணியும்வரைப்போராடுவோம் ஒன்றினைந்து .


ஆம்பூர் பெ.மணியரசன்

Donnerstag, 5. November 2009

எம் அன்னையின் அரவணைப்பு இழந்திட்ட நாள்

அம்மா உம்மை , எம்மிடமிருந்து இவ்வளவு விரைந்து

இயற்கை அன்னை நிலையான ஓய்வினை

உமக்கு வழங்கி தன்னிடம் சேர்த்துக்கொண்டாள்.

இறுதி நாள்வரை எமக்காக எம் நலத்தின் பால்

உழைத்திட்ட உங்கள் அன்பு உள்ளத்தினைப்

பொறுக்காது இயற்கையோ உங்கள் அன்புள்ளம்

தமக்கே கிடைக்கவண்ணமே அழைத்துக்கொண்டாள்

ஓய்வின்றி எமக்காக முப்பொழுதும் உழைத்திட்ட அன்பு

தாயே!நீங்கள் நன்றாக ஓய்வடுங்கள்.எம் கடமைதனை

தவறாது நினவேற்றிவிட்டு எமக்கு அளித்திட்ட அன்புதனை

எமக்கு பின்வருவோரிடம் கையளித்துவிட்டு வருவோம்,

உம் அன்பொளி தொடர்ந்நு இப்பூவுலகில் சுடர்விட்டு ஒளிர.

Donnerstag, 1. Oktober 2009

கோலார்தங்கவயலில் தந்தை என்.சிவராஜ்


தங்கவயலில் தந்தை என்.சிவராஜ் அவர்களுடன் என் தந்தை கே.பெருமாள்
அவர்கள்.இடது புறத்திலிருந்து மூன்றாம் நபர் கே.பி.பாலன் நான்காவதாக உள்ளவர் தங்கவயல் மைசூர் மாநில குடியரசு கட்சி பொது செயலாளர் என் தந்தை கே.பெருமாள் ஐந்தாவதாக உள்ளவர் வள்ளியம்மை ,ஆறாவதாக உள்ளவர் தந்தை என்.சிவராஜ்,ஏழாவதாக உள்ளவர் குடியரசு.

Mittwoch, 30. September 2009

களத்தில் நின்ற காவலர்கள்

ஆரியர் தம் சூழ்ச்சியினால் இயற்கையாகவே இளகிய மனம்
படைத்த மக்கள் மனதில் மதத்தின் பெயரால் இட்டுக்கட்டிய
புராண புளுகுமூட்டைகள் மூலம் சாதி பாகுபாடுகளை புகுத்தி அறிவை முடமாக்கியதுமல்லாது ஏற்ற தாழ்வுகளை
ஏற்படுத்தி தங்களுக்குள் வெறுத்துக்கொள்ளும் பிரித்தாளும் போக்கினை ஏற்படுத்திஅதில் குளிர் காய்கின்றனர். இதனை முதலில் இந்த சாதி, தீண்டாமைதனை எதிர்த்து குரல்
கொடுத்தவர் புத்தரே!புத்தரை வழியை பின் பற்றியோர் அனைவரும் ஆரிய பார்ப்பனர்களால் ஒடுக்கப்பட்டவர்களே! அவருக்கு பின் 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் களத்தில் ஆதிதிராவிடருக்காக பார்ப்பனரின் அட்டூழியங்களை பைசா தமிழன்,தமிழன் ஏடுகள் மூலம் அம்பலபடுத்திவர்
க.அயோத்தியதாசர் பண்டிதர்.அவரின் உறவினரான தாத்தா இரட்டைமலை
சீனிவாசன் இலண்டனில் நடந்த மூன்று வட்டமேசை மாநாடுகளில் அண்ணல் அம்பேட்கருடன் கலந்து கொண்டவராவார்.இவரின் தொண்டும்
வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்படவேண்டிய பணிகள்.இவர்களின் அடியையொற்றி அண்ணல் அம்பேட்கருடன் இணைந்து
தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உழைத்தவர் சட்டமன்ற உறுப்பினர்.,பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் முன்னால் நகராண்மை தலைவராக,இந்திய குடிரசு கட்சியின் தலைவராக விளங்கியவர் தந்தை என்.சிவராஜ் ஆவார்கள்.அவரின் 118வது பிறந்த நினைவு நாள் இன்று. தந்தையின் தொண்டை இளைய தலைமுறையினர் அறிந்து கொள்வது இதுவே தக்க தருணமாகும்.

Dienstag, 29. September 2009

Donnerstag, 21. Mai 2009

கருப்பு நாள்


இன்றுஎனை ஈன்ற தந்தையின் 26ம் ஆண்டு நினைவு நாள்
தங்கவயல் தமிழர் தலைநிமிர்ந்து வாழ தம்வாழ்நாள் முழுதும் அண்ணல்
அம்பேட்கர் வழிநின்று பாடாற்றியவர்
புத்தவழியினை பின்பற்றுவதாக கூறும் கொடியவிலங்கினால்
கொல்லப்பட்ட எண்ணிக்கியலடங்கா எம் தமிழ் ஈழ மக்களை நினைந்துருகும்
கரிய நாள்.காயமுற்றும் மனத்தளவில் சொல்லொன்னா துயரத்தில் ஆழ்ந்திருக்கும் எம் உடன் பிறப்புக்கள் ஆறுதல் பெறும் நாளை எதிரநோக்குகிறேன்

Freitag, 1. Mai 2009

உழைப்பாளர் நாள்

புரட்சி பாவலரின் 118 ஆம் ஆண்டு பிறந்தநாள் கிழமையில்
உழைப்பாளர் நாளில் அவர் பாடினப் பாட்டினை
நினைவு கூறுவதில் பேருவுவகைக்கொள்கிறேன்.
நீங்களே சொல்லுங்கள் !
சித்திரச் சோலைகளே!உமை நன்கு
திருத்த இப் பாரினிலே-முன்னர்
எத்தனை தோழர்கள் ரத்தம் சொரிந்தன
ரோ! உங்கள் வேரினிலே.
நித்தம் திருத்திய நேர்மையி னால்மிகு
நெல்விளை நன்னிலமே! - உனக்
கெத்தனை மாந்தர்கள் நெற்றி வியர்வை
இறைத்தனர் காண்கிலமே.
தாமரை பூத்த தடாகங்களே! உமைத்
தந்தக் காலத்திலே - எங்கள்
தூய்மைச் சகோதரர் தூர்ந்து மறைந்ததைச்
சொல்லவோ ஞாலத்திலே.
மாமிகு பாதைகளே! உமை இப்பெரு
வையமெ லாம் வகுத்தார் - அவர்
ஆமை எனப் புலன் ஐந்தும் ஒடுங்கிட
அந்தியெல்லாம் உழைத்தார்.
ஆர்த்திடும் யந்திரக் கூட்டங்களே! - உங்கள்
ஆதி அந்தம் சொல்லவோ? - நீங்கள்
ஊர்த்தொழிலாளர் உழைத்த உழைப்பில்
உதித்தது மெய் அல்லவோ?
கீர்த்திகொள் போகப் பொருட்புவியே! உன்றன்
கீழிருக்கும் கடைக்கால் - எங்கள்
சீர்த்தொழி லாளர் உழைத்த உடம்பிற்
சிதைந்த நரம்புகள் தோல்!
நீர்கனல் நல்ல நிலம் வெளி காற்றென
நின்ற இயற்கைகளே! - உம்மைச்
சாரும் புவிப்பொருள் தந்ததெவை? தொழி
லாளர் தடக்கைகளே!
தாரணியே! தொழிலாளர் உழைப்புக்குச்
சாட்சியும் நீயன்றோ? - பசி
தீரும் என்றால் உயிர்போகும் எனச்செல்லும்
செல்வர்கள் நீதி நன்றோ?
எலிகள் புசிக்க எலாம் கொடுத்தே சிங்க
ஏறுகள் ஏங்கிடுமோ? - இனிப்
புலிகள் நரிக்குப் புசிப்பளித்தே பெரும்
புதரினில் தூங்கிடுமோ?
கிலியை விடுத்துக் கிளர்ந்தெழுவார் இனிக்
கெஞ்சும் உத்தேசமில்லை - சொந்த
வலியுடையார் இன்ப வாழ்வுடையார் இந்த
வார்த்தைக்கு மோசமில்லை.

Dienstag, 14. April 2009

அண்ணல் அம்பேட்கரின் பிறந்த நாளில் அவரின் கருத்துகளை நினைவு கூறுகிறோம்.

அண்ணல் அம்பேட்கரின் பிறந்த நாளில் அவரின் கருத்துகளை நினைவு கூறுகிறோம்.
அது....
* இந்து மதத்தில் மனசான்றுக்கோ - பகுத்தறிவிக்கோ - சிந்தனைக்கோ முகாண்மை(முக்கியத்துவம்)இல்லை அல்லது வளர்ச்சிக்கும் வழியில்லை.ஓர் இந்து என்பவன் மறை(வேதங்)களுக்கு அடிமையாகவும் அல்லது ஸ்மிருதிகளுக்கு அடிமையாகவோ அல்லது மேன்மையர்(மகான்)களைப் பின்பற்றி வாழ்பவனாகவும் இருக்கவேண்டும்.
*மேல்சாதிகள் வளத்திற்கும், முன்னேற்றத்திற்காகவும் அவர்களின் குமுகாய(சமூக) உயர்வுக்கும் இந்து மதம் தோற்றுவிக்கப்பட்டது.
*மதம் மனிதனுக்காக, மதத்திற்காக மனிதன் அல்ல.
*இந்து மதம் குமுகாயத்தில்(சமிதாயத்தில்)தன்மானத்திற்கு இடமில்லை.இந்து மதம் சாதி வேறுபாடு(பேதம்) ஊன்ற கொள்கையின் அடிப்படையில் அமைக்கப்பட்டது.மனிதனை மனிதனாக மதிப்பதில்லை.தாழ்த்தப்பட்ட இன மக்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளுக்கு கரணியம்(காரணம்)தீண்டாமைதான்.இது சாதி இந்துக்களுக்கும். தீண்டத்தகாதவர்களுக்கும் நடக்கின்ற போராட்டமே.இந்த போராட்டத்தில் தன்மானத்தோடு சரிசம உரிமைப்பெற்று வாழ இந்து மதத்திலிருந்து தாழ்த்தப்பட்ட இன மக்கள் விடுபட வேண்டும்.
*இந்த நாட்டிலுள்ள சில முகாமையான குமுகாயப் பிணக்குகள் குறிப்பாக சாதி- தீண்டாமை - குமுகாய இழிவு தீர்க்கப்படும் வரை
விடுதலை தேவையில்லை என்பது அம்பேடகரின் கருத்தாயிருந்த்து.
வெள்ளைக்காரர் ஆட்சியில் அடிமைத்தனம் என்னென்பதை பார்ப்பனர்களும் உயர்சாதி இந்துக்களும் உணர்கிறார்கள்.ஆனால் அது அவர்களுக்கு அரசியல் அடிமைத்தனம் மட்டும்தான்.தாழ்த்தப்பட்ட மக்களுக்கோ! குமுகாய - பொருளாதார அடிமைத்தனமும் பாரமாய் இருந்துக்கொண்டிருக்கிறது.1931ஆம் ஆண்டு இலண்டன் வட்டமேசை மாநாட்டில் இதைச் சுட்டிக்காட்டினார்.'' 200 ஆண்டுகாலம் வெள்ளையரின் ஆட்சியில்
அடிமைகளாயிருந்தற்காகப் போராடி விடுதலை கேட்கிறீர்கள், ஆனால் , 2500 ஆண்டுகளாக நாங்கள் உங்களிடம் அடிமைகளாகயிருக்கிறோமே! எங்களுக்கு எப்போது விடுதலை? என்று
கேட்டார், யாராலும் விடைக் கூறமுடியவில்லை.
உண்ண உணவின்றி அவதிவுறுபவனுக்கு அரசியல் விடுதலை ஒரு கேடா?
சாதி வெறுப்புணர்வால் தலைகவிழ்ந்து நடப்பவனுக்கு அரசியல் விடுதலை ஒரு கேடா?
குமுகாய இழவுகளைத் தோளில் சுமந்தவண்ணம் திரியும் மக்களுக்கு
அரசியல் விடுதலை ஒரு கேடா?
இன்று கூலி செய்தால்தான் இன்றே சாப்பாடு என்கிற நிலையில் வாழ்ந்து வரும் மக்களுக்கு அரசியல் விடுதலை ஒரு கேடா?
அடிப்படைத் தேவைகளில் ஒன்றைக்கூட உருப்படியாய்ப் பெறமுடியாமல் வாழ்ந்து வரும் மக்களுக்கு அரசியல் விடுதலை ஒரு கேடா?
இவற்றைத்தான் திரும்பத்திரும்ப அம்பேட்கர் கேட்டார்.
இந்த நாட்டிலுள்ள கடவுள் - மத - இலக்கியங்கள் - காப்பியங்கள் அனைத்தும் வேண்டும்மென்றே வேறுப்பாட்டையும் இழிவையும்
ஏற்றத் தாழ்வுகளையும் கற்பிக்கின்றன.இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் குமூக சமத்துவத்தக்காகப் பாடுபட்டு அதை ஏற்படுத்துவதற்காகத்தான் காந்தியும், காங்கிரசும் மற்ற அரசியல் - குமூக நிறுவனங்களும் பாடுபட வேண்டுமேயொழிய, வெறும் அரசியல் விடுதலைக்காக மட்டும் போராடுவது பொருத்தமாகாது என்று கூறினார்.பார்ப்பனர்களுக்கும், உயர்சாதிக்கார்ரகளுக்கும்தான் விடுதலை இந்தியாவில் வாழ்விருக்கும். அவர்களின் தன்னல வேட்டைக்காடாக இந்த நாடு மாற்றப்பட்டு விடும் என்று எச்சரித்தார்.
எனவே, குமூக சமத்துவத்தை ஏற்படுத்தினால்தான் அரசியல் விடுதலையில் பொருளுண்டு என்று அம்பேட்கர் கூறினார்.
சாதியை ஒழித்த பிறகே வேறு எந்தப் புரட்சியையும் இங்கு உருவாக்க முடியும் என்று கூறினார்.
அரசியல் விடுதலையால் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எந்த நன்மையும் ஏற்படப் போவதில்லை என்றார்.
விடுதலைக்குப்பின் ஆட்சி பார்ப்பன - சாதி இந்துக்களின் கைக்கு மாறும், தாழ்த்தப்பட்ட மக்களின் பிணக்குகள் மேலும் மோசமாகும் என்றார்.
விடுதலை இந்தியாவில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அடிமை வாழ்வே தொடரும் என்றார்.
இந்த வகையில், அம்பேட்கர் கூறிய அனைத்துமே உண்மையென
உணரப்பட்டு வருவதோடு, இப்பிணக்குகள் மேலும் அதிகமாகி, தாழ்த்தப்பட்ட மக்கட் குமுகாயமே நசிந்து போய்விடுமோ! என்ற அச்சமும் அதிகமாகி வருகிறதை நாம் கண்க்கூடாக காணுகிறோம்.
அம்பேட்கர் தன் வாழ்நாளில் ஈடுபட்ட மிக முகாமையான பணிகளில் ஒன்று தாழ்த்தப்பட்ட
மக்களுக்கு கோயில் நுழைவு உரிமை மறுக்கப்பட்டதைப பெற்று தருவது.
கோயிலுக்குள் போக்கஃ கூடாதவர் என்று ஒரு சாராரை வைத்துக்கொண்டு ' கோயில் புனிதமானது ' என்று கூறுவது அயோக்கியத்தனமான கூற்று என்றார்.கோயிலைக் கட்டிவர்களையே கோயிலுக்குள் நுழையவிடாமல் தடுக்கும் சாதிய இந்துகளை கடுமையாக
சாடினார்.இதற்காக 1930ஆம் ஆண்டே நாசிக்கில் போராடினார்.தமிழ் நாட்டில் கோயில் நுழைவு உரிமைக்காக முதன் முதலில் உயிரைப் பணயம் வைத்துக் களத்தில் இறங்கிய குமிகம் சாணார்(நாடார்) குமுகமாகும்.தனித்து நின்று போராடியே இவ்வுரிமையை அவர்கள் வென்றார்கள்.1916க்கிப் பின் நீதிக் கட்சியினர்பலர் தாழ்த்தப்பட்ட மக்களுக்குக் கோயில்
நுழைவு உரிமை பற்றிப் பேசலானார்கள்.பின்னாளில் பெரியாரின் குரலெழிப்பியுள்ளார்.
இன்றுவரையில் தாழ்த்தப்பட்ட மக்களுக்குக் கோயில் நுழைவு உரிமை இல்லை.
என் வலைத் தளம் காண....,
thamizhankural.org

Montag, 2. März 2009

அமைச்சர் வேலுவிடம் தங்கவயல் தமிழரின் நீண்ட நாள் கோரிக்கை

தங்கவயல் தமிழரின் கோரிக்கை
மைய இருப்புப்பாதை இணை அமைச்சர் மாண்புமிகு வேலு அவர்களுக்கு ஆம்பூர்.பெ.மணியரசன் எழுதிக்கொள்வது,
ஐயா அண்மையில் கீழ் கண்ட செய்தியை தினமணி நாளேட்டில் காண நேர்ந்தது,கோலார் தங்கவயலிருந்து பங்காருப்பைட்டைக்கு புதிய இணைப்பு இரயில்களை இயக்க மத்திய இரயில்வே துறை இணை ஆமைச்சர் உறுதி அளித்திருப்பதாக மாநில காங்கிரஸ் நிர்வாகக்குழு உறுப்பினர் ஏ.முத்துமாணிக்கம் தெரிவித்துள்ளார். .என்பதாகும்.
அது, கோலார் தங்கச்சுரங்கம் மூடப்பட்டது முதல் அச் சுரங்கத்தில் பணியாற்றிய ஆயிரக்கணக்கானோர் தினமும் வேலைக்காக பெங்களூருக்குச் செல்ல வேண்டிய நிலை உள்ளது. தங்கவயலில் இருந்து பங்காருப்பேட்டை சென்றால் மட்டுமே பெங்களூர் செல்லும் தொடரியை(இரயிலை)ப் பிடிக்க முடியும். அதுபோல் பெங்களூரிருந்து திரும்பும்போது, பங்காருப்பேட்டை வந்து பிறகு அங்கிருந்து பேருந்தில் தங்கவயல் திரும்பும் நிலை உள்ளது. இதையடுத்து கோலார் தங்கவயலுக்கும், பங்காருப்பேட்டைக்கும் இடையே அதிகாலை நேரத்திலும், இரவிலும் இணைப்பு இரயிலை இயக்கினால் தங்கவயிருந்து தினமும் பெங்களூர் சென்று திரும்பும் சுமார் இரண்டாயிரம் தமிழர்கள் அலுவல் கரணியப் பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதன் செயலாக்கத்திற்கு உறுதியளித்திருக்கும் மாண்புமிகு வேலு அவர்களுக்கு நன்றியினை தெரிவித்துக்கொள்ளுவதோடு தங்கவயல் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையினை உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.பங்காருபேட்டையிலிருந்து மாரிக்குப்பம் வரை இருப்புப்பாதை உள்ளது.ஒரு சில இணைப்பு தொடர்வண்டி ஓடுகின்றன.இது வேலை நிமித்தம் செல்லும் பயணிகளுக்கு பயனுள்ளதாக இல்லை.
மேலும் பங்காருபேட்டையிலிருந்து குப்பம் வழியாக சென்னைக்கு போகும் வழக்கமே உள்ளது.இதனை பங்காருபேட்டையிலிருந்து குப்பம் ஊடாக சென்னைக்கு போவதற்கு பதிலாக பங்காருபேட்டையிலிருந்து தங்கவயல் மாரிக்குப்பம் ஊடாக குப்பம் செல்வதற்கு ஏற்பாடு செய்துவிட்டால் ,அனைத்து சென்னை-பெங்களூரு-சென்னை வண்டிகளும் தங்கவயல் ஊடாக செல்லும் அல்லவா?இதில் தங்கவயல் மாரிக்குப்பத்திலிருந்து குப்பத்திற்கு மட்டுமே புதிய பாதை அமைக்க வேண்டும்.பங்காருபேட்டை தங்கவயல் மாரிக்குப்பம் பாதையை தேவைப்படின் சீர்யமைத்துக்கொள்ளலாம்.
இந்த ஏற்பாட்டினை செய்து கொடுத்தால் தங்கவயல் மக்களின் நீண்டக்கால வேண்டுக்கோள் (இது ஐம்பது அறுபதுகளில் தங்கவயல் இந்தியக் குடியரசு கட்சியின் சார்பில் என் தந்தை கே.பெருமாள் அவர்கள் பல போராட்டங்களைச் செய்துள்ளார்.தங்கச் சுரங்கம் மூடப்படும் நிலை தெரிந்தே தங்கவயல் தமிழர்களின் எதிர்காலம் கருதி வட மாநிலம் போக இருந்த மண்வாரி எந்திரத் தொழிற்சாலை தங்கவயலில் அமைய இரயிலில் தலைக்கொடுத்து மறியல் செய்து சிறைக்கு சென்றவர்,அதன் பயனாக மண்வாரி எந்திர தொழிற்சாலை தங்கவயலில் அமைந்த்து.என்றாலும் மாநில கன்னட அரசு தமிழர்களுக்கு முக்கியத்துவம் தருவதில்லை.இன்றுவரை தங்கவயல் தமிழர்கள் கன்னட அரசால் ஒடுக்கப்படுகின்றனர்) ஈடேறுவதுடன் தங்கச்சுரங்கம் மூடப்பட்ட நிலையில் இந்த போக்குவரத்து இணைப்பால் ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு பலக்கோணங்களில் வாழ்வு ஒளியேற்றிவைத்த க்கு வந்து சேரும்.தங்கவயல் மக்களிடத்தில் மனத்தில்
புகழ் உச்சிலிருப்பீர்கள்.இந்த கோரிக்கையை இப்பொழுதே தமிழரான
நீங்கள் செய்யாவிட்டால் இனி யாரும் செய்யமாட்டார்கள்.
தங்கவயல் மக்களின் நலன் கருதி உங்களின் பதவி காலத்தில்
செய்தால் மிக்க நலமாக இருக்குமென்று கேட்டுக்கொள்கிறேன்.
பண்டுவர்.இராமதாசு அவர்கள் பா.ம.க.தொடங்கிய நாளுக்கு எனக்கும்
அழைப்பிதழ் அனுப்பியிருந்தார்.குறுகியக் கால அழைப்பாக இருந்தமையால் வர இயலாமல் போனது.இன்று பா.ம.க.வின் முன்னெடெப்பு , வளர்ச்சி பாராட்டுதற்குறியது.
நன்றிவுடன்
இவண்
ஆம்பூர்.பெ.மணியரசன்
தமிழ்ப்பண்பாட்டுக்கழக முதல்வன்
செருமனி

Mittwoch, 14. Januar 2009

தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்

2040 ம் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்
தமிழரேதமிழரே இன்னுமென்ன உறக்கம்?
பொழுதும்புலர்ந்துவிட்டது, கதிரவனும் கண்
விழித்துகதிர் வீச முற்பட்டுவிட்டான் நீவீர்
ஆழ்ந்துஉறங்கிடும் வேளை உம்மைச் சுற்றி
என்னநடக்குதென கனவில் காணவியலாது
தமிழரேகண்விழித்துப் பார் உம் கை கால்கள்
சாதி,மதம்,சடங்கு,கணிய மூடநம்பிக்கையால்
கட்டப்பட்டுள்ளதைபார்!பார்!! கண்விழித்து பார்!
நம்மினத்தைக்காட்டிக் கொடுக்கும் எட்டப்பன்கள்,
நும்ஏமாளித்தனத்தை பயன்படுத்தி ஏத்திப்பிழைக்கும்
வேட்டுவவல்லாதிக்க எத்தர்கள் உம் தொடையில்
கயிறுதிரிப்பதைக் கண்விழித்து பார்! தமிழினத்திற்கு
முகவரிகொடுக்க மானத்தோடு தன்னுரிமையோடு வாழ
தன்னுயிர்ஈந்து ஈகத்துடன் போராடிடும்
தன்மானத்தமிழ்ச்சிகள்தமிழர்களை வழி நடத்தும்
பண்டைத்தமிழ்வீரம் ஒருங்கமைந்த மாவீரனைப் பார்!
அம்மாவீரனின்எண்ணம் ஈடேற முடக்கும் சூழ்ச்சிகளை
உடைத்திடதமிழரே நாம் அனைவரும் ஒன்றினைந்து
உலகத்தவர்க்குநம் ஞாயமான கோரிக்கைகளை
எடுத்தியம்ப,மேற்குறிப்பிட்ட எம்மீது திணிக்கப்பட்டதனை கலைந்து
பகுத்தறிவுக்கண்க்கொண்டு எம் தமிழ்ச்சான்றோர் எண்பத்தெட்டு
ஆண்டுகளுக்குமுன் ஏற்படுத்திக் கொடுத்த தமிழ்த்தொடராண்டான
திருவள்ளுவத்தமிழ்ப் புத்தாண்டில் தமிழருக்குள் தமிழில்
உரையாடிடவும் தமிழ்ப்பெயர் சூட்டிடவும் சூளுரை ஏற்போம் வாரீர்!
பொங்கட்டும்தமிழ் உணர்வு ஓங்கட்டும் மனிதநேயம்.

இவண்
ஆம்பூர்பெ.மணியரசன்.
தமிழ்ப்பண்பாட்டுக் கழகம் செருமனி
thamizhankural.org

Donnerstag, 25. Dezember 2008

நினைவு நாள்


எனை ஈன்ற எந்தை கே.பெருமாள்
அவர்களின் தந்தை ஆம்பூர் குப்புச்சாமி
இந்து மத குமுகாயக்கேட்டால் ஒடுக்கப்பட்ட
தமிழ் மக்களை விழிப்புர தொடக்கத்தில்
பைசா தமிழன் பின்பு தமிழன் ஏட்டின் மூலம்(1913)
௧௯௧௩ வரை பண்டிதர் க.அயோத்திதாசர் பாடாற்றினார்.
அவருக்கு பின் கோலார் தங்கவயலில் பண்டிதமணி
ஜி.அப்பாதுரையார் தொடர்ந்து நடத்தினார்.அந்த ஏட்டினை
என் தந்தைக்கு வாங்கி கொடுத்து படிக்கச் செய்து பிற்காலத்தில்
ஆதி திராவிடர் எழுச்சிக்கு பாடாற்ற வழிவகுத்த பாட்டனாரின்
46ம் நினைவு நாள் இன்று.

Freitag, 19. Dezember 2008

தங்கவயல் பாடல்

தங்கவயல் பாடல்
நாட்டுப்புறப் பாடல் மெட்டு
இயக்குநர் : கொ.உலோகநாதன்
வந்தனம் வந்தனம் வந்தனம்
வந்தனம் வந்தனம் தானங்க
வந்திருக்கும் நீங்க ளெல்லாம்
பாட்டக் கேளுங்க
எங்க ஊறு எங்க ஊறு
தங்கவயலுங்க - இந்த
தங்கவயல் உலோகநாதன்
பாட்டக் கேளுங்க
(வந்தனம்)
பொன்னு வெளஞ்சதெல்லாம்
தங்கவயல் நிலத்தில் தானுங்க
நாட்டுக்கு தங்கத்தைக் கொடுத்ததெல்லாம்
பாட்டாளிதாங்க உழைத்த பாட்டாளிதாங்க
தங்கச்சுரங்கம் ஆரம்பித்தவர்
ஜாண்டைலர் குழுமம்தானுங்க
அது 1880ல் தொடங்கப்பட்டதுங்க
உலகத்திலே புகழடைந்த தங்கவயலுங்க
அதில் 35,000 ஆயிரம் தொழிலாளர் பாடுபட்டாங்க
தங்கச் சுரங்கத்தில் உயிரைவிட்டு
மாண்டவர்கள் எத்தனைப்பேருங்க - முடிவில்
10,000 ஆயிரம் தொழிலாளர்
உயிரை விட்டாங்க
தங்கச்சுரங்கம் நடத்திவந்தது இன்றும்தானங்க
120 ஆண்டுகாலம் ஆகிவிட்டதுங்க
முடிவான 3,200 தொழிலாளர்தானங்க
முடிவில் 2001 லேதான் மூடிவிட்டாங்க
பாட்டாளி படும் அல்லல்கள்
பல கோடிதானங்க - அந்த
பாராளுமன்றம் மன்சுவைச்சா
எல்லாம் கூடுமுங்க.
( வந்தனம்)
இப்பாடலை இயற்றிப் பாடியவர் கவி ,இசைமுரசு
கொ.உலோகநாதன்
தங்கவயல்

Dienstag, 18. November 2008

இந்து வல்லான்மைக்குஎதிரக்குரல் எழுப்பிய முதல் தமிழன்

தமிழன் ஏடு ஆசிரியர் பண்டிதர் க.அயோத்திதாசர்
தமிழன் ஏட்டை தொடர்ந்து நடத்திய பண்டிதமணி ஜி.அப்பாதுரையாஃ

திருவாட்டி.இலட்சிமி பெருமாள்

அன்பிற்கும் பாசத்திற்கும் உரிய என் தாயார்
0௩.௧௧.௨00௮ ம் ஆண்டில் 8ம் ஆண்டு நினைவு நாள் இன்று
தங்கவயல் விடிவெள்ளி
பண்டிதர் க.அயோத்திதாசர்,பண்டிதமணி அப்பாதுரையார்,
இரட்டைமலை சீனிவாசன்,என்.சிவராஜ்,அண்ணல் அம்பேட்கர் கொள்கைகளை தன் குரல்வள பேச்சால்
தங்கவயல் மக்களின் மனத்தில் வேருண்றச் செய்த
தன்னலமற்ற பதவிகளை துறந்த ஒடுக்கப்பட்ட தமிழர்களின் விடிவுக்காக குரல் எழுப்பிய தலைவர்
கே.பெருமாள் அவர்கள்
.
பண்டிதர் அயோத்தியதாசரின்’’ தமிழன்’’ ஏட்டை 1914 முதல் நடத்திய
பண்டிதமணி ஜி.அப்பாதுரையார்
அருளறம் உரைத்த அந்தணன் வாழி
முகவுரை
பண்டிட் ஜவர்லால் நேரு இந்திய இந்திய நாட்டின் பிரதராயிருந்தப்போது நாடெங்குமுள்ள பௌத்த சங்கங்களுக்கு நிதிவுதவி அளித்து பகவன் புத்தரின் 2500 ம் ஆண்டு ஜெயந்தியை சிறப்பாக கொண்டாட வேண்டுமென்ற முடிவை அறிவித்தார். அதுபோது தங்கவயல் தென்னிந்திய பௌத்த சங்கங்களின் சார்பில் நடைப்பெற்ற விழாவின் போது பண்டிதமணி ஜி.அப்பாதுரையார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவை மக்களுக்கு பயன்படும்வகையில் புத்தமாக வெளியிட வேண்டுமென்ற பேராவலினால் இம்முயற்சினை மேற்கொண்டுள்ளோம். அண்ணல் அம்பேத்கர் அவர்கள் புத்தமார்க்கத்தை தழுவியப்போது அவருடன் லட்சக்கணக்கான மக்கள் சரணடைந்து பௌத்தத்திற்கு மறுமலர்ச்சி உண்டாக்கினர்.அப்புனித மார்க்கத்தை ஏற்று அண்ணலின் வழியை பின்பற்ற துடிக்கும் மக்களுக்கு இச்சிறு நூல் பயன்படும் என்ற நோக்கத்துடன் வெளியிடப்படுகிறது. எனவே சமுதாய மாற்றத்தை, மறுமலர்ச்சியை விரும்பும் அனைவரும் ஆதரவு தர வேண்டுகிறேன்.
கே.பெருமாள்
தலைவர்
அம்பேத்கர் நினைவு நிதிக்குழுவினர்
பெங்களூர்-5
தங்கவயல் “ ஆசிரியர் நாவலர் தென்னிந்திய பௌத்த சங்கத் தலைவர் பண்டிதமணி ஜி.அப்பாதுரையார் அவர்கள் பகவன் புத்தரின் 2500ம் ஆண்டு விழாவின்போது ஆற்றிய சொற்பொழிவு.
அருளறம் உரைத்த அறவாழி அந்தணன்
அறவாழி அந்தணனாம் சாக்கிய புத்தரின்,
2500ம் ஆண்டின் திருவிழா, இவ்வாண்டு, இத்திங்கள் முழுமதி நிறைந்த, இந்நாளில் தொடங்கப்பட்டிருக்கிறது. அறிச்சான்ற உலகமக்கள், பலரும் இத்திருவிழாவில் கலந்துக்கொண்டு மகிழ்ச்சியடைவார்கள் என்பதற்குறிய அறிக்குறிகள் எங்கும் காணப்படுகின்றன. எண்பது கோடி மக்களை இடமாக கொண்ட பௌத்த உலகம் , புண்ணிய முதல்வனின் தண்ணிய அருளறத்தையுன்னி, ஆர்வப்பெருங்கடலில் ஆழ்ந்து நிற்கும் அடிமைத்தளை நீங்கி ஆட்சி நலம் பெற்ற நமது இந்திய மக்களும் அரசமர் செல்வனின் அரும்பெரும் விழாவைச் சிறப்புடன் ஆற்றி சீர்பெறெ வேண்டுமென்று , மக்கள் ஆட்சி மன்றத்தின் துணை இன்னொலியாக இந்தியாவெங்கும் இயங்கிகொண்டிருக்கிறது .
போதி விழாவென்னும் , இப்பெருவிழா இந்தியாவெங்கிலுமினிது நிறைவேற வேண்டுமென்னும் நன்னோக்கத்துடன் அறிஞர் , பேரவை ஒன்றை நிறுவி பெருநிதியையும் தந்துதவிய நமது இந்திய பாராளுமன்றத்தார்க்கு பௌத்த உலகம் என்றும் நன்றி கூற கடமைப்பட்டிருக்கிறது.
வாள் வலிமையும் , ஆட்சியின் ஆற்றலும் ,சேனைத்திரளும் துணைக்கொண்டு சிலமதங்கள் பரப்பப்பட்டிருக்கின்றன. . ஒரு துளியிரத்தமும் உலகிற் சிந்தாமலும் ஒருவரையும்
துன்புறுத்தாமலும் உலகிற் பரவிய மார்க்கமொன்றிருக்கிறதென்றால் அது பௌத்த மார்க்கம் என்பதை எவராலும் மறுக்கவோ மறைக்கவோ ,முடியாதென்பதை வரலாற்று நூல்கள் வற்புறுத்துகின்றன.
வகுப்பு வேற்றுமையும், நாட்டுப்பூசலையும் அடிப்படையாகக்கொண்டே சில மதங்கள் தோன்றியிருக்கின்றன்.அவற்றின் வரலாற்றின்கண் அவ்வவ்வகுப்புக்கும் , நாட்டுக்கும் ,ஆதரவும் பெருமையும் காட்டப்பெற்று மற்றையோரைக் கீழ்மைபடுத்தியுள்ளதை நன்கு காணலாம் .அவ்வித வேற்றுமையுணர்ச்சிக்கோ ,தற்பெருமைக்கோ பௌத்தத்திற் சிறிதும் இடமில்லை.
ஒருகாலத்தில் கௌண்டிணியரைத் தலைமையாகக் கொண்ட கடுந்தசிகள் ஐவருடன் சித்தார்த்தரும் சேர்ந்திருந்து, கடுந்தவத்தை மேற்கொண்டார்.
பிறகு உடலை வருத்துங்கடுந்தவத்தால் உண்மை ஞானத்தைக் காண்டலரிது என அதனை விடுத்து ,ஒழுக்கத்தினால் ஏற்படும் உள்ளத்தூய்மையின் உயர்ந்த ஞான எல்லையாம் மற்றற்ற போதி நிலையைச் சித்தார்த்தர் அடைந்தபின் மக்கட்கு துக்க நிவாரண மார்க்கத்தை விளக்க்ப் புறப்பட்டார் .வழியில் பழைய
தோழர்களாகிய தவசிகளை கண்டார்.அவர்களருகே புத்தர் நெருங்கியபோது அவரை வரவேற்று உபசரித்த அத்தவசிகள் அவரது குடும்பப்பெயரை பெருமைப்படுத்த நினைத்து கௌதமரே என்று அழைத்தார்கள். அப்போது புத்தர் எனது குடும்பப்பெயரைப் பெருமை படுத்த நினைத்து என்னை கௌதமரே என்று அழைக்காதீர்கள் மக்களாய் பிறந்தோருள் உயர்வு ,தாழ்வு கற்பிக்கும் வேற்றுமையுணர்ச்சிக்கு யான் உட்பட்டவன் அல்லன்.மன்பதை யாவும் ஒன்றெனெக்கருதி அருளறத்தை மேற்கொள்ளும் ஒருவரை உயர்வும், தாழ்வும், மேன்மையும் ,கீழ்மையும் கற்பிக்கக்கூடிய குடும்பப்பெயரலாவது, குலப்பெயரலாவது அழைத்தல் தகுதியுடைத்தன்று. எவ்வுரையும் தன்னுயிர் போல் பார்க்கும் பரந்த உள்ளத்தவராய் சிறந்து விளங்கும்வீர்களாக என்று கூறித் தனது முதற் பிரங்கமாகிய , தர்மச் சக்கர பிரவ்ர்த்தனமெனும், அறவாழியை அவர்களுக்கு விளங்குபடியுரைத்தார். இதை திரிபிடகத்தில் தர்ம சக்கரபிரவர்த்தன சூத்திரம் என்று கூறப்பட்டுள்ளது . இவ்விடத்தில்தான் அசோக சக்கரவர்த்தி “ கற்றூணை எழுப்பி புத்தர் போதித்த தர்ம சக்கரமாகிய அறவாழியை சித்தரித்திருக்கிறார்.
நமது இந்திய ஜனநாயக் ஆட்சியின் மணிக்கொடியில் அமைக்கப்பட்டு இலங்குவது ஆட்சியின் சின்னமாக முத்துரையிடப்பட்டு வருவதும், இவ்வறவாழியாம் தர்மசக்கரம் என்பதையும் நாம் அறிந்து ஒழுக வேண்டும். இதுபற்றியே,
”ஆதி முதல்வன் அறவாழியாள்வோன்
அறக்கதிராழி திறம்ப்வுருட்டிக்
மறகடந்த வாமன்”
என்று இலக்கியங்களில் கூறப்பட்டுள்ளது. பிறவிப்பிணி மருத்துவன் எனப்போற்றப்படும் இப்பெருமகன் கய்லைம்பதி அடுத்துள்ள உலும்பிணி சோலையின்கண், பிறந்தார் என்று அசோக சக்கரவர்த்தியால் ஒரு கற்றூண் எழுப்பப்பட்டு,
உலகொளியாம் புத்தரென்னும்
ஞான மூர்த்தி பிறந்த்விடம் , என எழுதப்பட்டிருப்பதை இன்றுங்காணலாம் .இவர் தோன்றியபோது
விந்தியமலைக்கு வடதிசை கங்காநதியின் இரு அருங்கிலும் சந்நியாசிகளைத் தலைமையாகக் கொண்ட வேத வேள்வி மார்க்கம் பரவியிருந்தது. இரத்தம் தோய்ந்து நிரம்பிய பலி பீடங்கள், குருக்களின் இருக்கையாக காணப் பட்டன.
மக்கள் மூடநம்பிக்கையால், மடமையும், வறுமையுமாகிய இருளால் சூழப்பட்டிருந்தனர். அதுகாலை அறிவுச் சுடர் பரப்பி அறியாமை இருளைப்போக்கும் இள ஞாயிறு போல் புத்தர் தோன்றி , மெய்யொளியைப் பரப்பினார். இக்கருத்து விளங்குபடி மணிமேகலையில் ,
’’ உயிர்களெல்லாம் உணர்வு பாழாகிப்
பொருள் வழங்கும் செவித்துளை தூர்ந்தறிவிழந்த
அறந்தலையுலகத்து அரும்பாடு சிறக்கச்
சுடர்வழக்கற்றுத் தருமாறு காலையோர்
இளவல் ஞாயிறு தோன்றிதென்ன?
நீயோ தோன்றினை நின்னடி பணிந்தேன். ’’
எனக் கூறியிருத்தல் ஊன்றிகவனிக்கத்தக்கதாம். இம்மாபெரும்
முதல்வன் , உலகியல் அறிந்து அருளறம் பரப்பி வருங்காலத்தில் சிராவஸ்தி நகரை அடுத்த ஆலவி புரத்தில் அறவுரை போதித்துக்கொண்டிருந்தபோது , ஆலவிபுர வாசியான ஒரு ஏழை குடியானவன் காணாமற்போனதன் எருதைத்தேடி பிடிப்பதற்காக
காலையில் புறப்பட்டு பலதிசைகளிலும் தேடியலைந்து எருதைக் கண்டுபிடித்து மந்தையில் சேர்த்துவிட்டு களைப்பும் , பசியும் மிகுந்திருந்தும் , வீட்டுக்குச் சென்றால் அறவுறரைக் கேட்கத்தவறிப்போம் என்றெண்ணியவனாய் விரைந்தோடி வந்து ,
கூட்டத்தில் நுழைந்து முன்சென்று , புத்தர் அமர்ந்து இருக்குக் பீடத்திற்கு ஒருபுறமாய் அமர்ந்தான். களைப்பினால் சோர்வடைந்திருந்த அவன் முகத்தைப் பார்த்த புத்தர் , அவன் களைப்பினால் சோர்வடைந்திருக்கும் காரணத்தை விசாரித்தறிந்துக் கொண்டு , அறச்சாலையை கவணிப்பவரை அவவேழை குடியானவன் பசியாறும்படி உணவளிக்க சொன்னார். அவன் உண்டு பசி தணிந்து , கூட்டத்திற்கு வந்தபின், தமது அறவுரையை கூறி முடித்தார், என்று பேசிக்கொண்டார்கள்.
அவர்களது உணர்ச்சியின் போக்கைக்கண்ட பகவன் ‘’ ஜிகச்சா பரம ரோகர் ‘’ என்ற வாக்கியத்தை சொல்லி , பசிப்பிணி மிக கொடியது , பசியினால் துன்பப்படும் ஒருவன் அறவுரைகளைச் சரிவரக் கவணிக்கமாட்டான்.ஒருக்கால் அவனுக்கு அது துன்பமாக காணப்படும்.அந்நிலையில்நாம் அவனை வருத்தியவர்களாவோம்.
ஆகலின் பசிப்பிணியாற்றுவதே நமது அருளறத்திற்குரிய கடமையாகக் கொள்ள வேண்டுமென விளக்கினார்.
இங்ஙனம் பௌத்தம் கடுமையான பட்டினி விரதங்களை
அறவே நீக்கிவிடுவதால் , பிற மார்க்கத்தினர் , பௌத்தர்களை புஷ்டி மார்க்கத்தை பாராட்டுகின்றவர்கள் என்று இகழ்ந்து கூறுகின்றவர்கள் என்று இகழ்ந்து கூறுகின்றனர். உணவால் உடம்பும் , உடம்பால் உயிரும் உயிரால் உணர்வும் தொடர்ந்து இயங்குவதாலிவற்றை ஒன்றினின்று ஒன்றை அறவே நீக்கி உண்மை காண்டலரிதென பௌத்தம் மறுத்துக்கூறுகிறது. அன்றியும் நல்லுணர்வு தோன்றுவதற்கும் , ஆகலின் , உடல் நலத்திற்கேற்ற நல்லுணவை , இயல்பான அளவு உட்கொண்டு ,உணர்வின் தூய்மையைப் பெருக்க மக்கள் முயற்சிக்க வேண்டும் . ஆதலால் பட்டினிவிரதங்களால் உடலை வருத்திக் கொண்டு , உடல்நிலையைக்கெடுத்துக் கொள்ளுதலுமாகிய இருவித அளவுகடந்த செயல்களையும் அறவே நீக்கி , இயல்பான நடுவு நிலைமையில் நின்று பொருந்திய அளவு நுகர்ந்து இன்புற வேண்டுமென்பதே பௌத்தத்தின் நோக்கமாம் . உடையின்றி திரிதலும், மொட்டை அடித்தலும் ,ஜடை தரித்தலும் , நாகரீகமற்ற ஆடையை உடுத்திக்கொள்ளுதலும் , பலி கொடுத்தலும் ,கடினமாய் தூங்காதிருத்தலும் , அக்னிக்குப் பலியிடுதலும், குற்றமுள்ள எண்ணங்கள் நினைந்தவனை , சிறிதும் தூய்மைபடுத்தாவாம். வேதத்தை ஓதுதலும் , தரையிற் படுத்தலும், நன்னெறியிற் செல்லாதவளை தூய்மைபடுத்தாவாம்.
எல்லாச் செயல்களுக்கும் மனச்செயலே ஆதாரம். அளவு கடந்து
நெடுநாள் வரைக்கும் எவ்விதமான கடின தவங்களையும் உடல் நலியும்படிபழகினாலும், மனதை நேர்மையான வழியிற்செலுத்தும்
ஆற்றலில்லாவிட்டால் ஒன்றும் பயன்படாது. ’’ சித்த தீனம் தர்ம
தீனம்போதி’’என்றபடி சத்தர்மத்தில் வழக்கம் மனதைச்சார்ந்திருக்கிறது ஆதலின் ஒவ்வொருவரும் தத்தம் மனதை நடு நிலைமையான வழியில் நிலைக்கச் செய்தலே பழுதிலா வாழ்க்கைக்கேதுவாம்.
ஒரு காலத்தில் பகவன் புத்தர் மகா நாமன் என்னும் அரசனையும் பார்த்து அரசனே! மனிதன் மிகுந்த சுகத்தையே அளவுகடந்து அநுபவிக்க வேண்டுமென்ற வேட்கையில் சிக்கினால் சொற்ப துக்கமும் பெருந்துக்கமாகவே துன்புறுத்தும்.
சுகத்தை மிகுதியாக விரும்பாதவிடத்தே பெருந்துக்கமென்று கருதப்படுவதும் சொற்ப துக்கமாகவே தோன்றும். சுகத்திற்கும் , துக்கத்திற்கும் நம்முடைய மனமும் , செயலுமே காரணமாகும்.
பகையைப்பெருக்கி கொள்கிறவர்களும் நாமே , ஆகையால் புறப்பகைவரிடம் வெற்றிக்கொள்ளும் வீரனைவிட நமக்குள் இருக்கும் அகப்பகைவர்களாம் காம , வெகுளி, மயக்கம் என்னும் முக்குற்றங்களை வெனறவனே சுத்தவீரனாவான் எனக்கூறியுள்ளார். பசியும் , பிணியும் , பகைமையும் நீங்கிய சமத்துவ வாழ்க்கையே சமூக நல்வாழ்க்கை என்பதை ஒவ்வொருவரும் உணர்ந்து பசிப்பிணி நீங்கும் பண்பிற்கு ஏதுவாய் ஈகை என்னும் அறிச்சுரந்த அன்பு சமூகத்தில் பரவ வேண்டும்.
இதுபற்றியே ’’ தானம் , சீலம் , பிரக்ஞா ,பாவணா ’’
சூத்திரத்தின்படி தானத்தை முன் வைத்து சீலத்தை அதற்கடுத்தபடியாக கூறப்பட்டிருக்கிறது. தானத்தின் நோக்கம் செல்வர்களை எல்லாருடைய சமத்துவத்தை வளர்க்கச் செய்தலுக்கும் ஏழைகளை நன்னெறியில் செலுத்துவதற்கும் , துணைதரும் பொருட்டேயாம். வருமானத்திற்குரிய ஊதியத்தின் ஆதாரங்களை மக்கள் சமுதாயத்தில் பரவச்செய்தல் அவர்களுடைய உடல் நலத்தைப்பெரிதும் வளர்க்கக்கூடியெதாகவும் இருப்பதுடன் அவ்விதம் எல்லாருடைய
நன்மைக்காகவும் பாடுபடுவதில் ஒருவித பெருமையும் மகிழ்ச்சியும் அடையும் பண்பாட்டை விருத்திச் செய்யக்கூடியதாக இருக்கின்றது. ஆகலின் பசித்தோர் யாவராயினும் அவர்பசிப்பிணியைப் போக்கவேண்டியதே முதற்கடமையாக அருளறத்திலே விளக்கப்பட்டிருக்கிறது. மக்கள் சமுதாயத்தில் பசிப்பிணிக்கு இடமில்லாத வாழ்க்கை ஏற்படுமானால் உலகத்தில் காணப்படும் பல கொடிய குற்றங்கள் தோன்றுதற்கு ஏதுவில்லாமற் போகும்.
’’ மண்டினிஞாலத்து வாழ்வோர்க்
கெல்லாம் உண்டி கொடுத்தோர்
உயிர் கொடுத்தோரே , பசிப்பிணி
யென்னும் பாவியது தீர்த்தோர்
இசைச்சொல்லளவைக்கு என்னா நிமிராது ’’
என அழகுற கூறியிருக்கும் ஆன்றோரின் அருமருந்து மக்கள் சமுதாயத்தில்திளைத்துபசிப்பிணிஒழிதற்காகஊக்கங்கொள்வோ
மென்ற உறுதி உள்ளத்திற் கொண்டு இந்த 2500 ம் ஆண்டின் பிறவிப்பிணி மருத்துவனாம், போதிச் செல்வனின்திருவிழாவைப் பெருவிழாவகக் கொண்டாடுவோமாக.
’’ புத்தங் சரணங்கச்சாமி
தர்மங் சரணங்ச் சாமி
சங்கம் சரணங்கச்சாமி ’’